மனைவி மீது கணவனான மருமகன் தாக்குதல் நடாத்தியதை தட்டிக் கேட்ட மாமனர் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததுடன் மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18-02-2025) வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சோந்த 66 வயதுடைய பொடி எட்வேட் போஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது...
மகளை தாக்கிய மருமகன்
குறித்த நபரின் மகளை மருமகன் இன்று தாக்கியதையடுத்து அதனை கண்ட மாமனார் ஏன் தாக்குவதாக கேட்ட நிலையில் அவர் தலை மீது மருமகன் பொல்லால் தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை நடாத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.