நாடாளுமன்ற சமையலறையில் “எலிகள், கரப்பான் பூச்சிகள்”: சபாநாயகர் கவலை


இலங்கை நாடாளுமன்ற உணவகத்தில் காணப்படும் மோசமான சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
​நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட 40 ஆண்டுகளில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அல்லது சுகாதார அதிகாரிகள் யாரும் உணவு தயாரிக்கும் இடங்களைச் சோதனையிட அனுமதிக்கப்படவில்லை என அவர் ஒரு நிகழ்வில் பேசும்போது தெரிவித்தார்.

​“ஏப்ரல் மாதம், நாடாளுமன்ற வளாகத்திற்குள் உணவுப் பாதுகாப்பு நிலைமையை ஆராயுமாறு பத்தரமுல்லை மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் நான் கோரினேன், அவர்கள் எனக்கு ஒரு அறிக்கையை வழங்கினர்,” என்று அவர் கூறினார்.

​அந்த ஆய்வில், மனித பாவனைக்கு உதவாத உணவு சேர்க்கைப் பொருட்கள், எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் எச்சங்கள், உடைந்த தரைத்தளம் மற்றும் சேதமடைந்த சமையல் பாத்திரங்கள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

​“இந்த அறிக்கை இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை, ஆனால் வரும் நாட்களில் அது வெளியிடப்படும் என நான் நம்புகிறேன்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

​இந்த விடயத்தின் தீவிரத்தை வலியுறுத்திய விக்கிரமசிங்க, ஒரு சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் ஒரு முக்கிய நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு விசமயமாகும் (food poisoning) அபாயம் குறித்து எச்சரித்தார்.

​“இந்த விடயங்களில் நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, அதிகாரிகள் எம்மீது அதிருப்தி அடைகிறார்கள். சிலர் என்னை பொதுச் சுகாதார பரிசோதகர் என அழைத்தும் கேலி செய்கிறார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை