என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு தயார்.!

“அரசமைப்பு பேரவை விவகாரம் தொடர்பில் எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்குத் தயார்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் எம்.பி. விலக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

“அரசமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக எட்டு தடவைகள் சிறீதரன் வாக்களித்தார் எனப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதாவது நான் எட்டு தடவைகள் இராணுவத்தைத் தெரிவு செய்துவிட்டேன் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.

அரசமைப்பு பேரவையில் நடக்கும் விடயங்களை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்த முடியாது. எனவேதான் என்னை விசாரணை செய்த சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரியுள்ளேன்.

வடக்கு, கிழக்கிலுள்ள மதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் என்னை விசாரிக்கட்டும்.


சிறீதரன் தமிழ் இனத்துக்கு எதிராகச் செயற்பட்டார், இராணுவத்துக்குச் சார்பாகச் செயற்பட்டார் என்பதை உரிய ஆவணங்கள் சகிதம் நிரூபித்தால் அரசியல் இருந்தே நான் ஒதுங்கி விடுகின்றேன்.

அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்றவர்கள் இதனைச் செய்கின்றனர்.” – என்றார்.
புதியது பழையவை