சவூதி - இலங்கை உறவின் புதிய அத்தியாயம்!

இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பல தசாப்த காலங்களாகப் பின்னிப் பிணைந்த நட்புறவு, தற்போதைய இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் பதவிக்காலத்தில் ஒரு புதிய உயரத்தைத் தொட்டுள்ளது.

இரு அரசுகளுக்கிடையிலான அதிகாரபூர்வ உறவுகளைத் தாண்டி, இரு நாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கத்தையும் பரஸ்பர புரிதலையும் வலுப்படுத்தும் வகையில் அவர் ஆற்றிவரும் பங்களிப்பு, இலங்கை-சவூதி உறவுக்கு ஒரு புதிய பரிமாண
த்தை வழங்கியுள்ளது.

தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியின் முனைப்பான முயற்சிகளின் விளைவாக, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 

சுற்றுலா, அபிவிருத்தித் திட்டங்கள், விவசாயம் உள்ளிட்ட பல துறைகளிலுள்ள இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகள் சவூதி முதலீட்டாளர்களிடம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பு வலுப்பெற்று, இலங்கையின் பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கு சவூதி அரேபியா ஒரு முக்கிய பங்காளியாக உருவெடுத்துள்ளது.

இலங்கை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கடுமையான சவால்களை எதிர்கொண்ட காலகட்டங்களில், சவூதி அரேபியா உண்மையான நண்பனாக இலங்கையுடன் நின்றதை மறுக்க முடியாது.

தூதுவர் அல்கஹ்தானியின் வழிகாட்டலில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KS Relief) ஊடாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டது. அதேபோன்று கல்வித் துறையை வலுப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கான கல்வி உதவிகள் வழங்கப்பட்டதுடன், சுகாதாரத் துறையை மேம்படுத்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான ஆதரவுகளும் வழங்கப்பட்டது. 

ரமழான் உள்ளிட்ட விசேட காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சமூக நலத்திட்டங்கள், சவூதி மக்களின் மனிதாபிமான உணர்வை இலங்கை மக்கள் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் நலன்கள், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பிலும் தூதுவர் அல்கஹ்தானி விசேட கவனம் செலுத்தி வருகிறார். இரு நாடுகளுக்கிடையிலான தொழிலாளர் விவகாரங்களைச் சுமுகமாக முன்னெடுத்து, தகுதியும் திறனும் கொண்ட இலங்கையர்களுக்கு கௌரவமான மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்க அவர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் இலங்கையர்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இலங்கையை ஒரு பாதுகாப்பானதும் அழகானதும் சுற்றுலாத் தளமாக சவூதி அரேபிய பிரஜைகளுக்கு அறிமுகப்படுத்துவதிலும் சவூதி தூதுவராலயம் முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் விளைவாக அண்மைக் காலங்களில் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், அது நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இத்தகைய சுற்றுலா மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள், இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்பையும் பரஸ்பர மரியாதையையும் மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் வினைத்திறனான, மனிதநேயத்தால் நிரம்பிய இராஜதந்திர அணுகுமுறை, இலங்கை-சவூதி உறவை வழமையான அரசுகளுக்கிடையிலான அதிகாரபூர்வ உறவாக மட்டுமன்றி, இரு நாட்டு மக்களுக்கிடையிலான ஆழமான நட்புறவாகவும் மாற்றியுள்ளது. அவரது அர்ப்பணிப்புமிக்க பணிகள், எதிர்காலத்தில் இலங்கையும் சவூதி அரேபியாவும் இணைந்து பயணிக்க ஒரு வலுவான, நிலையான அடித்தளத்தை உறுதியாக அமைத்துள்ளன.

தாராள மனப்பான்மை, மனிதநேய அணுகுமுறை மற்றும் வலுவான இராஜதந்திர ஆதரவு, இலங்கை-சவூதி உறவை இராஜதந்திர தொடர்பைத் தாண்டி, சகோதரத்துவத்தின் அடிப்படையில் நிலைத்த நட்புறவாக இரு நாடுகளும் மாற்றியுள்ளது.
புதியது பழையவை