கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய குறித்த பெண் இன்று (01.09.2026)ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், அன்றைய தினமே பிறந்ததாகக் கருதப்படும் குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்தியதுடன், அது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண், குழந்தையும் கரவனெல்ல ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனைத் தகவல்களின்படி, குழந்தை தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.