பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. வவுனியா நகரத்திற்குள் வலம் வந்த பேரணி தற்போது, மன்னார் வீதியால் முன்னகர்ந்து வருகிறது.
இன்றைய பேரணியில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக, முஸ்லிம் மக்களும் கணிசமானளவானர்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா பள்ளிவாசலின் அருகிலும் பேரணி தரித்து நின்று ஜனசா எரிப்பு உள்ளிட்ட விடயங்களில் கோசமெழுப்பப்பட்டது. அந்த மசூதியின் பிரதான மௌலவியும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியின் 4ஆம் நாள் இன்றாகும்.
இன்று வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி ஆரம்பிக்கவுள்ளது.
முதல்நாள் பேரணி மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது.
இரண்டாம் நாள் போராட்டம் 4ஆம் திகதி தாழங்குடாவில் ஆரம்பித்து மட்டக்களப்பு நகரையடைந்து, அங்கிருந்து திருகோணமலை சிவன் கோவிலில் முடிவடைந்தது.
நேற்று திருகோணமலை சிவன் கோவிலில் இருந்து 3ஆம் நாள் பேரணி ஆரம்பித்தது.
பேரணிக்கு திருகோணமலை சிங்கள பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு வாகனங்கள் மீது கல்வீசப்பட்டது. புல்மோட்டைக்கு அண்மையாக- கல்லறை பாலத்தில் வீதியில் ஆணிகள் தூவப்பட்டு தடையேற்படுத்தப்பட்டது.
இவற்றை கடந்து முல்லைத்தீவிற்குள் பேரணி நுழைந்தது.
நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு பேரணி சென்றது. பின்னர் முல்லைத்தீவு நகரையடைந்து, அங்கிருந்து முள்ளிவாய்க்கால் தூபிக்கு சென்றது. பின்னர் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி ஊடாக வவுனியா புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.