இளம் பெண்களை ரகசிய வீடியோ எடுத்த ரோஹித ராஜபக்சவின் மனைவியின் முன்னாள் வளர்ப்புத் தந்தை

கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகரின் லீலைகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுப்பெறத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

நட்சத்திர ஹோட்டல்களுக்கு வருகை தரும் இளம் பெண்களை தமது கையடக்க தொலைபேசியில் அவர்களின் அனுமதியின்றி இரகசியமான முறையில் வீடியோ பதிவு செய்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த தமிழ் பேசும் வர்த்தகரான என்.வி. திவாகரன் என்பவருக்கு எதிராக இவ்வாறு எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான ரோஹித ராஜபக்சவின் மனைவி டட்யானாவின் முன்னாள் வளர்ப்புத் தந்தையான இவரின் செயற்பாடுகளை கண்டித்து ரோஹித ராஜபக்ச ட்விட்டர் பதிவை இட்டுள்ளார். அதில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவங்கள் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தாமும், தமது மனைவி டட்யானாவும் இந்த பாலியல் துன்புறுத்தல் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் என்.வி.திவாகரனுடன் சில ஆண்டு காலமாக எவ்விதமான தொடர்புகளையும் பேணவில்லை எனவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நபர் தமது செயற்பாட்டுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும், இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், சினமன் கிரான்ட் ஹோட்டல் நிர்வாகம் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தாம் வலியுறுத்துவதாக ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை