சம்மாந்துறை பஸ் டிப்போ வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு


சம்மாந்துறை பஸ் டிப்போ வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், பிராந்திய தலைவர்கள் என உரிய அதிகாரிகள் கவனத்தையும் ஈர்ப்பது போன்று எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்வு கிடைக்கும் வரை போராடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து, அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக செயற்படச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இருப்பினும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்கள் இன்று காலை அந்த சாலைக்கு முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

மிகப்பெரிய பிரதேசமான சம்மாந்துறைக்கு அந்த டிப்போ இருப்பதன் மூலம் பல நன்மைகள் இருப்பதாகவும் இந்த இடத்திலிருந்து அந்த டிப்போ அகற்றப்படுவதனால் சம்மாந்துறை பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பெண்கள், பாடசாலை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் கடுமையான அசௌகரியங்களை அனுபவித்து நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமைப்பினர், சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை