முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று மாலை வேளை இடியுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளை முற்றத்தில் உள்ள கோடாலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தில் வேணாவில் கிராமத்தினை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயக்குமார் (28) என்ற குடும்பஸ்தரே மின்னலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருகையில், மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டு முற்றத்தில் காணப்பட்ட கோடலியினை பாதுகாப்பாக எடுத்து வைப்பதற்காக குடைபிடித்துக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது மின்னல் முற்றத்தில் நின்ற வேப்பமரத்தில் தாக்கியுள்ளதுடன் குறித்த குடும்பஸ்தரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அத்துடன் பிடித்து சென்ற குடையின் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.
இதனையடுத்து வயிற்றிலும், காலிலும் எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் அயலவர்களின் உதவியுடன் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கத்தால் 3 விவசாயிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.