நிந்தவூர்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர் விடுதிகள் திறப்பு


அம்பாறை மாவட்டம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விடுதி பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமினால் இன்று 30-06-2021ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

பிரதேசத்தில் கோரோனா தெற்றுக்குள்ளாகும் நோயாளர்களுக்கு நிந்தவூர் கோரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி ஷகிலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பு.சுகுணன், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பறூசா நக்பர் மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் உள்ளிட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதே வேளை இன்று (30)கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சம்மாந்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா நோயாளர்களுக்கான அதி தீவிர கண்காணிப்பு பிரிவும் மற்றும் பிரத்தியேக விடுதியும் வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனிபா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நோயாளர் விடுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை