மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எனது தனிப்பட்ட விதமான பகையோ, கட்சி சார்ந்த அரசியலோ இல்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை முனனெடுக்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு நகர் - மன்ரசா வீதியில் அமைந்துள்ள எனது வீட்டுக்கு முன்னால் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத், மன வேதனையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, நான் கொழும்பில் இருந்த நிலையில், தொலைபேசி ஊடாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியதுடன் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை உடன் முன்னெடுக்குமாறும் நீதியை நிலை நாட்டுமாறும், பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவருக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன்.
எனது வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் பிறிதொரு நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மேற்படி நபர் காயமடைந்து, அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதில் மிக மிக வேதனை அடைகின்றேன். காலம் தாழ்த்தாது உரிய நீதியை நியாயத்தை நாட்ட கூடிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு கூறியுள்ளேன்.
அத்துடன் இந்த விடயத்தில் எனது தனிப்பட்ட விதமான பகையோ! கட்சி சார்ந்த அரசியலோ! இல்லை என்பதையும் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன் .