ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்காக இன்று 25-06-2021ஆம் திகதி மாலை விசேட உரை ஆற்றவுள்ள நிலையில், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி எதிர்க் கட்சி ஆறு அம்சக் கோரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கு உரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
‘ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றவுள்ளார். அதிகரித்த எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்கவும், தன்னிச்சையாக எடுக்கப்பட்ட உரங்கள் மீதான தடையை வாபஸ் பெறவும் அவர் முதலில் தயங்கக்கூடாது.
அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிராக எனது கட்சி மக்களுடன் போராடியது. அந்தப் போராட்டம் தொடர்ச்சியான போராட்டமாக அமையும்.
எனவே அரசாங்கமானது ஏற்கெனவே இருந்த விலைக்கு எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும்.
உரங்களின் பயன்பாட்டை மாற்றுவதற்கான முறையான திட்டத்தை வகுக்க வேண்டும். அத்துடன் வரவிருக்கும் நெல் பருவங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக உரங்களை வழங்க வேண்டும்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் மீன்பிடிச் சமூகத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஒரு நிலையான நிவாரணத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். எக்ஸ்பிரஸ் பேர்ல் தீ விபத்தால் ஏற்பட்டச் சூழல் கட்டமை மீள பாதுகாக்க வேண்டும்.
இணையவழி கல்விக்கான வசதிகள் இல்லாததால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், தடுப்பூசியை விரைவுப்படுத்தல், சுகாதாரத் துறைகளுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், மருத்துவமனை வசதிகளை அதிகரித்தல் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மக்களுக்கு நிதி ரீதியாக நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக இன்று(25) உரையாற்றும்போது இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.