ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சைப்பிரிவொன்றை புதிதாக அமைப்பதற்கான உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா இந்த உபகரணங்களைக் கையளித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தனது நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து இதற்கான நிதியுதவியினைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் நோயாளர்களுக்கான அவசர சிகிச்சைப்பிரிவு புதிதாக அமைக்கப்படுவதுடன் ஏற்கனவே இயங்கிவந்த சாதாரண நோயாளர்களுக்கான அவசர சிகிச்சைப்பிரிவை வேறுகட்டடத்திற்கு மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைத்திய அத்தியட்சகர் தயாளினி சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார வைத்தியட்சகர் என். மயுரன் இப்பொருட்களைக் கையேற்றார்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கொவிட் தொற்றாளர்களை தூர இடங்களிலுள்ள சிகிச்சை நிலைகளுக்கு அனுப்பப்படுவதனால் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஏறாவூர் வைத்தியசாலையிலும் சிகிச்சை நிலையமொன்றை அமைக்க பல்வேறு தரப்பினரும் நடவடிக்கை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை