ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோரை கைது செய்யும் அரசு -பெரும் பின்விளைவுகளை சந்தித்தே தீரும்


ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோரை கைது செய்யும் அரசின் இந்த அராஜகம் தொடர்ந்தால், அரசாங்கம் பெரும் பின்விளைவுகளை விரைவில் சந்தித்தே தீரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவித்ததாவது,
வன்முறையில் இறங்காமல் ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் - குற்றங்கள், குறைகள், நியாயங்களைப் பகிரங்கமாக எடுத்துக் கூற வேண்டிய வகையில் மக்கள் ஒன்றாகக்கூடி தங்களுடைய குரலை அரசுக்கு எதிராக எழுப்புவது மறுக்க முடியாத அடிப்படை உரிமை.
அந்த அடிப்படை உரிமை - ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அவ்விதமான உரிமை மறுக்கப்பட்டால் அது நாட்டினுடைய போக்கு நல்லதல்ல என்பதை எடுத்துக்காட்டும். அது சர்வாதிகாரத்தின் போக்கை வெளிச்சம் போட்டுக்காட்டும்.
அரசுக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இது ஜனநாயக நாடு எனில் மக்கள் சட்டத்துக்கு உட்பட்டு சுதந்திரமாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் உரிமை இருக்கின்றது. அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் என்றார்.
புதியது பழையவை