மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளரும் சுதந்திர ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலக குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக சசிகரன் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை என்னும் அடிப்படையில் ஊடகத்துறை மீது தொடர்ச்சியான அழுத்தங்கள் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை கட்டுபடுத்தும் வகையில் அடிக்கடி முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளை மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும் அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிரான குரல்கொடுக்க ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது