மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் கோவிட் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள்


கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் சினோஃபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம் கட்ட கோவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் சுமார் 28 நிலையங்களில் கோவிட் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் கட்டமாகத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேநேரம் சுகாதார பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையிலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளை ஏற்றியதைக் காணமுடிந்தது.
தொடர்ச்சியாக இந்த தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை