இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது


தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட முயன்றவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு தலைமையகப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் இல்லத்திற்கு முன்பாக இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கான நீதி வேண்டி இன்றைய தினம் அவரது பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்வதற்கு முயற்சித்தனர்.

இதன் போது அங்கு வருகை தந்த பொலிசார் தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக் காரர்கள் வருகை தந்திருந்த பஸ் உட்பட உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது 18பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புதியது பழையவை