சிவப்பு சீனியை 130 ரூபாய்க்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

சத்தொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களினூடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் புதன்கிழமை முதல் குறித்த விலைக்கு சிவப்பு சீனியை நுகர்வோருக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், இந்நாட்டில் மாதமொன்றுக்கு 45,000 மெட்ரிக் தொன் சீனி நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இதில் 23,000 மெட்ரிக் தொன் சீனி மக்கள் பயன்பாட்டுக்கும் மீதமுள்ள சீனி வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கமைவாக ஒரு நாளைக்கு 1,500 மெட்ரிக் தொன் சீனி, நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய தினம் மேலும் மூன்று களஞ்சியசாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. குறித்த களஞ்சியசாலைகளில் இருந்து 600 மெட்ரிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது.

சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த களஞ்சியசாலைகளே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளன. நேற்று கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைவாக 4,800 தொன் சீனியை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலையொன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை