இலங்கையில் இதுவரை சுமார் 4,200 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 900 பேர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக குடும்ப சுகாதார பணியக இயக்குனர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறினார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதை கூறினார்.
மேலும், கொரோனாவால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, 75% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இப்போது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் MOH அலுவலகத்திலிருந்தோ அல்லது அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்தோ தடுப்பூசிகளைப் பெறுமாறும் கூறினார்.
அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை நெருங்குவதை தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.
இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கொரோனா தொற்று இல்லாத கருவுற்ற தாய்மார்கள், பாதிக்கப்பட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களை வீட்டில் தங்கவைக்க கூடாது. அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.