அரசாங்கம் அறிவித்துள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவை ஏற்கப் போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனவே, தொடர்ந்தும் இணையவழி ஊடான கற்பித்தல் நடவடிக்கையை பகிஸ்ரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கவும் 2018 ஆம் ஆண்டில் கல்வியமைச்சினால் சம்பள ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனையை, அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு யோசனைகள் தொடர்பான இரண்டு தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லவுள்ளோம் என்பதை தெளிவாகக் கூறுகின்றோம்.
நாம் இன்று அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடலொன்றை நடத்தினோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தை நாம் ஏற்றுக்கொளளப்போவதில்லை.
இவ்வாறு ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற நிலையில் இருக்கும் போது, பலவந்தமாக அதனை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு முயற்சித்தால் அதற்குப் பயன் கிடைக்காது. இது குறித்து கலந்துரையாட வேண்டுமெனில் அரசாங்கத்திற்கு மேலும் சந்தர்ப்பம் வழங்குகின்றோம்.