மட்டக்களப்பு மாவட்டம் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி பெறாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரி.திவாகரன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி பெறாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜாவின் மேற்பார்வையில் வீடு வீடாக சென்று இன்று (22)ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி ஏற்றப்பட்டது.
நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி பெறாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தகவல் வழங்கி வரும் பட்சத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது.
வீடு வீடாக சென்று தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போடப்படும் நிலையத்துக்கு வர இயலாதவர்களின் வீட்டுக்கு வந்து தடுப்பூசி போடத் தயாராக இருப்பதாகவும் இலங்கையில் கொவிட் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், இதுவரை எந்தவொரு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியும் பெறாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.