கல்முனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் வைத்து போதைப் பொருள் மொத்த வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூவாயிரம் போதைப் பொருளுடன் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கல்முனை பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே 32 வயதுடை சந்தேக நபர் மூவாயிரம் போதை மாத்திரைகளுடனும் அதனை விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மிக நீண்ட நாட்களாக ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பிரதேசங்களில் போதைப்பொருள்களை மொத்தமாக விற்பனை செய்து வந்தவர் என்றும் இம் மாத்திரைகளை இன்றும் கல்குடா தொகுதிக்கு கொண்டு வரும்போதே வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய புலனாய்வு பிரிவினர் நீலாவணை விஷேட அதிரடி படையினரோடு இணைந்தே குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஊழியராக கடமையாற்றுபவர் என்பதுடன் இவர் கொழும்பிலுள்ள முகவரோடு நேரடியாக போதைமாத்திரைகளை இறக்குமதி செய்து கடந்த ஆறு வருடங்களாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.