இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கட்டுநாயக்கவில் உள்ள வெடிப்பொருள் களஞ்சியத்தில் இருந்து அமோனியம் நைத்ரேட் என்ற வெடி மருந்தை கொள்ளையிட்டமை சம்பந்தமான விமானப்படையின் சார்ஜன்ட், விமானப்படையின் கீழ் நிலை அதிகாரி ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைத்ரேட் வெடிப்பொருள் தொகை குறைந்துள்ளதாக விமானப்படையின் ஒழுங்கு விசாரணைப் பணிப்பாளர், பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய களனி பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
கொள்ளையிடப்பட்ட வெடிப்பொருளை கண்டுப்பிடிப்பது சம்பந்தமாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், இந்த வெடிப் பொருளை கருங்கல் உடைக்கும் தொழிலகங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்கள் கொள்ளையிட்ட அமோனியம் நைத்ரேட் 70 கிலோகிராம் என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.