நுவரெலியா டன்சினன் பகுதியில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர், தாயுடன், காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்ற யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன யுவதி, நுவரெலியா கிகிலியாமான காட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவத்த கீழ் பிரிவில் வசிக்கும், 26 வயதுடைய ஜெயபாலன் கற்புகதாரணி என்ற யுவதி, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்
நுவரெலியா இராணுவ முகாம் அதிகாரிகள், நுவரெலியா பொலிஸார் மற்றும் டன்சினன் தோட்டத் மக்கள், கடந்த 5 நாட்களாக, காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, சாந்திபுர பிரதேச மக்கள், கிகிலியாமான காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த யுவதி, காட்டில் கூக்குரல் எழுப்பியுள்ளார்.
அதனையடுத்து, அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
5 நாட்கள், காட்டில் தனியாக பசியுடன் அலைந்த யுவதிக்கு, பிரதேச மக்கள் உணவு வழங்கிய பின்னர், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில், காணாமல் போயிருந்த யுவதி கருத்து வெளியிடுகையில், தாயுடன் டன்சினன் தோட்டத்தில் இருந்து விறகு வெட்ட சென்ற நிலையில், தாயிடம் இருந்து வழி தவறி, பல பாதைகளில் அங்கும் இங்கும் அலைந்து, வீடு திரும்ப முடியாமல் தவித்ததாகவும், இரவு வேளைகளில், அச்சம் காரணமாக, எங்கும் நகராமல், ஒரே இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.