கொழும்பு, கம்பஹா களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 20 முதல் 29 வரையான வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இன்று (06) முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே குறித்த தரப்பினருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக ராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டார்.
எனினும் கொழும்பு மாவட்டத்தில் மேலதிகமாக விஹாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை இராணுவ முகாம் மற்றும் வேரஹெர இராணுவ வைத்தியசாலை ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே இவ்வாறு தடுப்பூசியை பெற்று கொள்ள முடியும் என ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.
மேலும் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசியே வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதன்படி சுகததாச அரங்கு, ஜிந்துபிட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, கம்பல் பார்க், சாலிகா மண்டபம் மற்றும் ரொக்சி தோட்டம் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, தடுப்பூசி நிலையங்களுக்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் வாகனங்களின் இன்றி நடைதூரத்தில் உள்ளவர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என கொழும்பு மாநகரசபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே குறிப்பிட்டார்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு உட்பட்ட பிரதேசங்களில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வசிக்கும் எவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.