ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று 13-09-2021ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய முதல்நாள் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் michelle bachelet அமர்வின் போது இலங்கை தொடர்பான வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.
இதன்போது இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பிலான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர அமைப்புகள் கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இலங்கை சார்பில் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் காணொளி ஊடாக கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவிற்கு அனுப்பி வைத்துள்ள குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சார்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பிலும் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதுடன், ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
உறுப்பு நாடுகள், துஷ்பிரயோகம் மற்றும் சுயாதீன அரசு நிறுவனங்கள், பொது நிர்வாகம் மற்றும் சட்டத்தின் பலவீனமான குற்றச்சாட்டுகள் குறித்து எச்சரிக்கையினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கம், சர்வதேச மனித உரிமை கடமைகளை நிறைவேற்றுவதற்கு அதன், உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கங்கள் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை மாற்றியமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நாட்டுக்கு எதிராக செயற்பட்டால் அதனை எதிர்நோக்க அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், நாட்டிற்கு ஏற்படும் பாதகமான சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.