மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இதுவரை 85 பேருக்கு கோவிட் தொற்று


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் 3வது கோவிட் அலையில் இதுவரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன், 85 பேருக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டு அவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியுள்ளதாக இன்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலைமைக பொலிஸ் நிலையத்தில் சுமார் 600 பொலிஸார் கடமையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் விடுமுறையில் சென்றுவரும் மற்றும் கடமையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றோம்.

இதில் இன்றுவரை 85 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தனிமைபடுத்தப்பட்ட பின்னர் குணமடைந்து திரும்பியுள்ளனர்.
அதேவேளை இங்கு கடமையாற்றும் பொலிஸ் சாஜன் ஒருவர் நீரிழிவு நோய்க்காக கொழும்பு பொலிஸ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றபோது அவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இருந்தபோதும் விடுமுறைக்கு வீடுகளுக்கு சென்று திரும்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தி அவர்களை அன்டிஜன் பரிசோதனையின் பின்னர் கடமையில் ஈடுபடுத்தி வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

புதியது பழையவை