மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுமண்வெளியில் உள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22)(புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலினையடுத்து களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரும் சடலத்தை பார்வையிட்டதுடன், குறித்த நபர் பாவித்ததாக கருதப்படும் ஊன்றுகோல் ஒன்றும், டோச் லைட் ஒன்றும் ஆற்றங்கரை ஓரமாக கிடந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிவரைக்கும் தமது வீட்டிலிருந்த குறித்த நபர் அதன்பின்னர் காணாமல் போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் 68வயதுடைய குறுமண்வெளி,பழைய தபாலக வீதியை சேர்ந்த குமாரய்யா கோபாலசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் நிலமையை பார்வையிட்டு அவரது முன்னிலையில் ஆற்றிலிருந்த சடலம் மீட்கப்பட்டதையடுத்து சடலம் தம்முடைய உறவினர்தான் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.