குடிபோதையில் வெலிக்கட சிறைச்சாலைக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த இராஜாங்க அமைச்சர்!

இராஜாங்க அமைச்சர் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் குடிபோதையில், நண்பர்கள் சிலருடன் நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகள் சிலரை தகாத வார்த்தைகளால் திட்டியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறையிட, சிறை அதிகாரிகள் சிலர் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதி, நடக்கக் கூட முடியாத நிலையில் போதையில் தள்ளாடிய இராஜாங்க அமைச்சரும் அவரது நண்பர்களும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குள் சென்றுள்ளனர்.

நண்பர்களுக்கு சிறைச்சாலையை காண்பிக்கவே இராஜாங்க அமைச்சர் நண்பர்களுடன் வந்துள்ளதாக அவரது நடவடிக்கைகளில் தெரிந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளனர்.

குடிபோதையில் வந்த குழுவினரை தடுக்க முயன்ற சிறை அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் தகாத வார்த்தைகளால் ஏசியதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர், சம்பவத்தை உறுதி செய்ததுடன், அது தொடர்பில் மேலதிகமாக எதனையும் குறிப்பிட முடியாது என தெரிவித்தார்.
புதியது பழையவை