மட்டு -போரதீவுப்பற்று எல்லைப் புறத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த அதிசயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 1987 ஆம் ஆண்டு சுயமாகத் தோன்றிய அம்பாள் சிலையை இதுவரை பாதுகாத்து வைத்திருந்த அவ்வூர் மக்கள், அது சுயமாக தோன்றி இடத்திலேயே வைத்து வழிபாடு செய்வதற்கு திடகங்கற்பம் பூண்டு அதனை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் எல்லைப் புறக்கிராமமான மாலையர்கட்டு கிராமத்திலேயே பல வருடங்களுக்கு முன்னர் இந்த அதிசயம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அக்கிராமத்தைச் சேர்ந்த முதியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் குருமண்வெளிக் கிராமத்திலிருந்து போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் மாலையர்கட்டு எனும் கிராமத்திற்கு 1966 ஆம் ஆண்டு குடியேறினேன். அப்போது இந்த இடத்தில் ஒரு ஆலமரம் நின்றது. அதன் கீழ் பிள்ளையார் சிலை ஒன்றும் இருந்தது. அதற்கு நான் தான் பூ வைத்து வணங்கி வந்தேன்.

பின்னர் 1987 ஆம் ஆண்டு வழக்கப்போல் பிள்ளையாருக்குப் பூ வைப்பதற்காகச் சென்றவேளை அருகில் அம்பாள் சிலை ஒன்றும் இருந்தது. அது எவ்வாறு வந்தது என தெரியாது. இது பற்றி கிராமமக்களிடமும் தெரிவித்தேன். யாரும் அங்கு அம்பாள் சிலையை வைக்கவில்லை எனத் தெரிவித்தனர் எனவும் தெரிவித்தார்.

பின்னர் அந்த அம்மன் சிலை அந்த இடத்திலேயே இருந்தது. அனைவரும் வந்து வணங்கிச் செல்வார்கள். சுயமாக தோன்றிய அம்பாளுக்கு சிறிய ஆலயம் அமைக்குமாறு அப்போதே ஊர் மக்களிடம் தெரிவித்தேன். அதற்கமைய தென்னை ஓலையால் சிறிய ஆலயம் அமைத்து அம்பாளுக்கு 2 வருடம் பூஜை செய்து வழிபாடு செய்து வந்தோம்.
அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு சிறியளவில் கல்லால் ஆலயம் அமைத்து அம்பாளை வழிபடுவதற்கு முற்பட்டவேளை யுத்தம் உக்கிரமடைந்ததனால் அனைத்தையும் விட்டுவிட்டு அம்பாள் சிலையை மாத்திரம் ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு இடம்பெயர்ந்து விட்டோம். அப்போது யுத்த காலம் ஆகையால் இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.

பின்னர் அம்பாள் சிலையை பெட்டியுடன் பல வீடுகளிலும், ஆலயங்களிலுமாக மாறி மாறி வைத்து பாதுகாத்தேன். அம்பாள் எனக்கு கனவில் அடிக்கடி வருவார், இதனை நினைத்து எனக்கு நித்திரை வருவதுமில்லை, தற்போது அம்பாள் தோன்றிய அதே இடத்தை ஊர்மக்களின் சிறிய சிறிய நிதிப் பங்களிப்புடனும், நான் வைத்திருந்த 45000 ரூபாவையும் கொடுத்து, துப்பரவு செய்து மீண்டும் அதே இடத்தில் வைத்து வழிபட ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சுயமாக தோன்றிய அம்பாளை யுத்த காலத்திலிருந்து பாதுகாத்து தற்போது அதே இடத்தில் வைத்து வழிபடுவதற்கு அம்பாள் அருள் புரிந்தமை எனக்கு ஆத்ம திருப்தியளிக்கின்றது.

எனினும் இதனை நிரந்தர ஆலயமாக நிர்மாணித்து வழிபடுவதற்கு ஏனையோரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலையர்கட்டு கிராமத்தைச் சேர்ந்த 78 வயதுடைய முதியவரான முத்துப்பிள்ளை நல்லதம்பி. இவ்வாறு பாதுகாத்து வந்த அம்பாள் சிலையை கடந்த திங்கட்கிழமை அதே இடத்தில் பிரதிஸ்டை செய்து அன்றிலிருந்து மீண்டும் வழிபாடு செய்து வருகின்றனர் அக்கிராமமக்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புறக் கிராமங்களில் ஆங்காங்கே நில ஆக்கிரமிப்புக்களும், காணி அபகரிப்புக்களும் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவித்துவரும் இந்நிலையில் மக்களின் இருப்புக்களை, பாதுகாப்பதற்காகவும், தக்க வைப்பதற்காக வேண்டியும் தமிழர்கள் ஆங்காங்கே பண்டைய காலமிருந்து பாதுகாத்து வந்த வழிபாட்டுத் தலங்களை மீளுருவாக்கம் செய்து வழிபடுகின்றனர்.

அதன் புத்துயிரூட்டும் செயற்பாடுகளுக்கு தனவந்தர்களும். புலம் பெயர் அமைப்புக்களும், தமிழர்களின் எல்லைப்புறங்களைப் பாதுகாக்க வேண்டும், என கோசமிடுபவர்களும், அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதியது பழையவை