மட்டக்களப்பு களுதாவளை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்து-வீதியை கடந்த பெண் பலி

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(03) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் குடும்ப பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களுதாவளை பிரதான வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான மணலசேகரம் சரஸ்வதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பக்கமிருந்து களுவாஞ்சிகுடி பக்கம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பெண் மீது மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதில் குறித்த பெண் ஸ்தலத்திலேயேஉயிரிழந்ததுடன், சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலததிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் களுதாவளையைச் சேர்ந்த 21 வயதுடைய ருசிகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் இரண்டாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன், களுவாஞ்சிகுடி போக்குவரததுப் காவல்துறையினர் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதியது பழையவை