படுகொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 21வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் ஒன்று நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இந்த இரத்ததானமுகாம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் அனுசரணையுடன் இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.
இந்த இரத்ததானமுகாமில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட பெருமளவான இளைஞர் யுவதிகள் இரத்தம் வழங்கியதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பாரிய இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததானமுகாம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
இந்த அரசாங்கமானது பொய்யான ஒரு அரசாங்கம்.அனைத்து விடயங்களிலும் பொய்யும்,ஊழலும் மோசடியும் மக்களுக்கு சுதந்திரமில்லாத ஒரு மோசமான அரசாங்கத்தின் அமைச்சர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.ஜனாதிபதி தொடக்கம் பிரதமர்,அமைச்சர்கள் பொய்களை சொல்லும் நிலைபாடே காணப்படுகின்றது.வியாபார நோக்குடனும் இந்த அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.
நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தேன்.அவற்றில் எதனையும பூர்த்திசெய்யாமல் சிறிய ஒரு விடயத்தினை மட்டும் செய்துவிட்டு அதற்கொரு மாபெரும் திறப்பு விழாவினை செய்துவிட்டு சென்றிருந்தார்.
இலங்கையில் காணாமல்ஆக்கப்பட்டவர் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை ஜனாதிபதி நியமித்துள்ளதாக செய்திகளில் பார்க்ககூடியதாகவுள்ளது. கடந்த காலத்தில் கடத்தல்,காணாமல்போதல் சம்பவங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி குழுவுக்கும் தொடர்பிருப்பதாக பல்வேறு நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நியமித்தது ஏற்றுக்கொள்ளமுடியாது.
இலங்கையில் உள்ள மீனவர்களின் பிரச்சினையை பார்க்கமுடியாத அமைச்சர் எவ்வாறு அந்தமானில் உள்ள மீனவர்களைப்பார்க்கப்போகின்றார்.எந்தவொரு விடயத்திலும் அமைச்சர் டக்ளஸ் மீது நம்பிக்கைவைக்கமுடியாது.
அமெரிக்கா செல்லவுள்ளதானது தமிழ்தேசிய கூட்டமைப்பின் சட்டகுழு அல்ல.அது ஒரு சட்ட நிபுணர்குழுவொன்று அமெரிக்காவுக்கு செல்லவுள்ளது.அதில் எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் இடம்பெற்றுள்ளார்.
வடகிழக்கினை பொறுத்தவரையில் இன்று நம்பிக்கையேற்பட்டுள்ளது.புதிய அரசியலமைப்பு ஒன்று விடயத்தில் அமெரிக்காவுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதை ஒரு நம்பிக்கையுடன் பார்க்கவேண்டியுள்ளது.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் மீண்டும் சட்ட விரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத் அவர்களின் கவனத்திற்கு இது தொடர்பில் கொண்டுசென்றபோது ஒரு சிலர் அப்பகுதிக்கு சென்றதான தகவல்கள் தனக்கும் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக வந்துள்ளதாகவும் நேற்று சனிக்கிழமை என்ற காரணத்தினால் மகாவலி அதிகாரசபையில் கூடுதலான அதிகாரிகள் கடமையில் இல்லாத நேரத்தினை பார்த்து அவர்கள் வந்துள்ளதாகவும் அந்த பிரசேத்திலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பதாகவும் சொல்லியிருந்தார்.
மயிலத்தமடு,மாதவனை பகுதியானது ஒரு பெரும்பகுதியாகும்.அந்த பகுதிகளுக்குள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் பண்ணையாளர்கள் ஊடாகவே எமது கவனத்திற்கு தெரியவருகின்றது.
கடந்த ஓரு வருடமாக அமைச்சர்கள் வழங்கிய வாக்குறுதிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.நீதிமன்ற உத்தரவுகள் சட்ட விரோதகுடியேற்றவாசிகளின் கொட்டில்களில் அவர்களை வெளியேறுமாறு ஒட்டப்பட்டுள்ளபோதிலும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.இந்த மயிலத்தமடு,மாதவனை பகுதியை ஒரு குடியேற்றமாக மாற்றுவதே அவர்களின் நோக்கம்.



