மட்டக்களப்பு ஏறாவூர் தள வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு மிக மோசமான அநீதி நடைபெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மயங்கி விழுந்த 63 வயதுடைய ஒரு பெண் நோயாளியை சரியாக மதியம் 12 மணிக்கு ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்கிறார்கள்.
நோயாளிக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என முடிவு வந்ததன் பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சேலேன் வழங்கப்பட்டது.
நேயாளிக்கு அந்த நேரத்தில் சிறுநீர், மலம் தானாக வெளியேறிவிட்டது. எனவே அதனை நோயாளியின் உறவினர்கள் துப்பரவு செய்ய பல தடவைகள் முயற்சி செய்தும் நோயாளி மயக்கமாக இருந்த காரணத்தால் முடியாமல் போயுள்ளது.
நோயாளியை துப்பரவு செய்து அவரை வாட்டுக்கு அனுப்புவதற்கு வைத்தியசாலையில் இருந்து யாரும் வரவில்லை.
நோயாளியை கட்டிலுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே போட்டுவிட்டார்கள். 12 மணியில் இருந்து 7 மணிவரை நோயாளியை சிறுநீர், மலத்துடன் அப்படியே போட்டு வைத்திருந்தனர்.
அதன் பின்னர் நோயாளியின் வீட்டில் இருந்து சென்ற நான்கு உறவினர்கள் நோயாளியை வேறு கட்டிலுக்கு மாற்றி நோயாளியை துப்பரவு செய்து கழுவி வாட்டில் கொண்டு ஒப்படைத்தனர். சுமார் 7 மணித்தியாலங்கள் குறித்த பெண் நோயாளியை சிறுநீர் மலத்துடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே போட்டு வைத்திருந்தனர்.
அதன் பின்னர் குறித்த நோயாளி ஒரு கான்ஸ்சர் நோயாளி என்பதாவல் அவருக்கு எந்த வித சிகிச்சையும் வழங்காது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் அவரை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு நான்கு ஆண்களை கூட்டிவருமாறு அங்குள்ள தாதியர்கள் கூறியுள்ளனர்.
நோயாளியின் இரண்டு உறவினர்கள் இருந்தும் குறித்த நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு தாதியர்கள் ஒத்துழைப்பு வழங்க வில்லை.
நோயாளியான தனது தாயை மகள் மிகவும் கஷ்டப்பட்டு அம்பியுலன்ஸ் வண்டியில் ஏற்றிய போது ஏனைய தாதியர்கள் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.
ஆம்புலன்ஸில் நோயாளியை ஏற்றிய பின்னர் நோயாளியை இறக்குவதற்கு இரண்டு ஆண்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு அம்பியுலன்ஸில் ஏறிய தாதியர் ஒருவர் கூறியுள்ளார்.
ஏறாவூரில் இருந்து இரண்டு ஆண்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு போவதற்குள் ஆம்புலன்ஸ் வண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று விட்டது.
நோயாளியை இறக்குவதற்கு ஆட்களை கூட்டி வரவில்லை என்று நோயாளியின் மகளுக்கு ஏறாவூரில் இருந்து ஆம்புலன்சில் வந்த தாதிய பெண் மிக மோசமான திட்டியுள்ளார்.
ஏற்கனவே ஒரு நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்களது உறவினர்கள் நான்கு பேர் கூட செல்லவேண்டும் என்பதை முன்கூட்டியே ஏறாவூர் வைத்தியசாலை நிர்வாகம் கூறியிருந்தால் அந்த நோயாளியின் உறவினர்கள் முன் கூட்டியே நான்கு உறவினர்களை கூட்டிச் சென்றிருப்பார்கள்.
அத்துடன் வைத்தியசாலையில் இருக்கும் நோயாளி மலம் சிறுநீர் கழித்தால் அதனை உறவினர்கள் நான்கு பேர் சென்றுதான் துப்பரவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தால் 7 மணித்தியாலங்கள் ஒரு நோயாளி மருத்துவ சிகிச்சை இன்றி கிடந்திருக்க தேவையில்லை.
இலங்கையில் மருத்துவத் துறையில் உள்ள மிக மோசமான செயற்பாடுகளில் இதுவும் ஒன்று.

