அம்பாறை - சம்மாந்துறை பிரதான வீதியை அண்மித்த ஆற்றுக்குள் மூன்று நாட்கள் மதிக்கத்தக்க சிசு சடலமாக மீட்பு


கல்முனை - சம்மாந்துறை பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் உடல் காவல்துறையினரால் இன்று (05) மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், சம்மாந்துறை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சிசுவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சந்தேக நபருடன் விரைந்த காவல்துறையினர் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் வீசப்பட்ட சிசுவை மீட்டெடுத்தனர்.

தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த குழந்தையையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக சந்தேக நபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உயிரிழந்த சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
நாளாந்த கூலித் தொழிலாளியான குறித்த சந்தேக நபர், இரண்டாவது திருமணம் செய்தவர் என்பதுடன் தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.


புதியது பழையவை