கிழக்கு பிராந்தியத்திற்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப விருத்தி மாநாடு

இலங்கை கைத்தொழில் துறை மற்றும் புதிய வேலைத்திட்டங்களில் டிஜிட்டல் திட்டத்தை பயன்படுத்துவது தொடர்பிலான வழிகாட்டல் வேலைத்திட்டம் நிகழ்நிலை ஊடாக தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விஸ்தரிக்கும் நோக்கிலேயே குறித்த வேலைத்திட்டத்தினை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் முன்னெடுத்திருந்தது.

கிழக்கு மாகாண தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அறிவைப்பயன்படுத்தி புதிய வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் முன்னெடுப்பது தொடர்பில் இதன் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அதே வேளை நிகழ்நிலை ஊடாக இடம்பெற்றிருந்த குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டு மாவட்டத்தில் அனைத்து துறைசார் நிறுவனங்களிலும் டிஜிட்டல் ஊடாக உச்சக்கட்ட சேவைகளை மக்களுக்காக வழங்கி வருவதாக தெரியப்படுத்தியிருந்தார்.

அத்தோடு நிகழ்நிலை ஊடாக கலந்துகொண்ட அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட மேலும் பல அரச மற்றும் அரசுசாரா தனியார் சார்ந்த தொடர்பாடல் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டு டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான வளர்ச்சி இதனூடாக மக்கள் அடைந்துவரும் நன்மைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக மக்கள் அடையவிருக்கு நன்மைகள் தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தனர்.

புதிதாக தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதும் தகவல் தொழில் நுட்ப துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொகையை முன்று இலட்சமாக அதிகரிக்க வைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப விருத்தி தொடர்பாக மாவட்டத்தில் கடமையாற்றிவரும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

புதியது பழையவை