மாவீரர் தினத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்த சாவகச்சேரி நீதிமன்றம்

மாவீரர் தினத்துக்குத் தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி பொலிஸாரால் கிஷோர் உட்பட 13 பேருக்கு எதிராகவும், கொடிகாமம் பொலிஸாரால் கிஷோர் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராகவும் தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன், பெயர் குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதாலும், இலங்கையின் சட்டம் இயற்றுகின்ற உயரிய சபைகளில் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் தொடர்பாகத் தெளிவாக அறிந்திருப்பார்கள்.

எனவே அவர்கள் மீது சட்டத்தை மீறுவார்கள் என்ற அடிப்படையில் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது.

ஆனால் பெயர் குறிப்பிட்ட நபர்களும், ஏனையவர்களும் இலங்கையின் சட்டங்களை மீறி ஏதாவது நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

அதனால் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று குறித்த நபர்களுக்கு எதிராகத் தடை உத்தரவை வழங்க முடியாது என்று தெரிவித்துக் குறித்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த வழக்கில் பெயர் குறிப்பிட்டவர்கள் சார்பாகச் சட்டத்தரணி மணிவண்ணன், சட்டத்தரணி சதீஸ்வரன், சட்டத்தரணி குகனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.
புதியது பழையவை