முச்சக்கரவண்டி சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்

வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது   இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவித்து இராணுவ வாகனம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது.

வவுனியா- பண்டாரிக்குளம் பகுதியில் இரவு (12) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, புகையிரத நிலைய வீதியூடாக முச்சக்கரவண்டி ஒன்று பயணித்த போது இராணுவ கப் ரக வாகனம் ஒன்றைக் குறித்த முச்சக்கரவண்டி முந்திச் செல்ல முற்பட்ட போது இராணுவ வாகனத்தின் சாரதிக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி இராணுவ வாகனத்தை முந்திச் சென்றுள்ளது.

இதனையடுத்து வவுனியா  பண்டாரிக்குளம் வீதியில் திரும்பிய முச்சக்கர வண்டியை வழிமறித்த குறித்த இராணுவ கப் ரக வாகனத்திலிருந்த இராணுவத்தினர் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் இராணுவ வாகனத்தினை பின் தொடர்ந்து சென்ற முச்சக்கரவண்டி சாரதி பண்டாரிக்குளம் பகுதியில் இராணுவ வாகனத்தினை வழிமறித்து தன் மீது தாக்குதல் நடத்தியமைக்கான காரணத்தைக் கேட்டார்.

இதன்போது அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்ததுடன், இராணுவ வாகனத்தைச் செல்ல விடாது வழிமறித்தனர்.
அதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் இராணுவ வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன், சிறிது நேரத்தின் பின்னர் இராணுவ வாகனத்தினை பொலிஸார் விடுவித்திருந்தனர்.

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய முச்சக்கரவண்டி சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


புதியது பழையவை