மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் நேற்று(26) சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 17வது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
நேற்றைய தினம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கல்லாறு மத்திய விளையாட்டுக்கழக தலைவர் விவேக்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள், கழக உறுப்பினர்கள்,உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று கல்லாறு ஜோன்டி பிரட்டோ விளையாட்டுக்கழகம், வலம்புரி விளையாட்டுக்கழகங்களின் ஏற்பாட்டிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி,கோட்டைக்கல்லாறு உட்பட பல பகுதிகளில் இன்றைய தினம் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.