இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டம் காரணமாகவே பதற்ற நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டின் தேசிய வளங்கள் மற்றும் யுகதனவி மின் நிலையம் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்றுள்ளதாகவும், இதனால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


