மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மற்றும் அனுமதி வழங்கிய ஆற்று மணல் அகழ்வுவை உடன் நிறுத்துமாறு கோரியும் வெலிகந்தையில் இருந்து ஊத்துச்சேனை பிரதேசத்துக்கான பிரதான வீதியை செப்பனிட்டுத்தருமாறு கோரி பிரதேச மக்கள் கொழும்பு பொலன்னறுவை பிரதான வீதியை மறித்து இன்று திங்கட்கிழமை (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள எல்லைக்கிராமான வடமுனை எல்.பி, ஊத்துச்சேனை வடமுனை ஆகிய பிரதேசங்களில் சுமார் 800 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள மாதுறு ஓயா பகுதியில் ஆற்று மண் அகழ்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளனர்.
இருந்தபோதும் அதனை மீறி மீரான்ரவில் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து தினமும் 50க்கு மேற்பட்ட உழவு இயந்திரத்தில் எடுத்துக் கொண்டு செல்வதால் ஊத்துச்சேனை பாலத்தில் இருந்து வெலிக்கந்தை சந்தி வரையான வீதி பழுதடைந்துள்ளதுடன் அந்த வீதியால் நடந்து கூட செல்லமுடியாத நிலை நீண்டகாலமாக இருந்து வருகின்றது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறைப்பாடு தெரிவித்தும் பலன் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
இதனையடுத்து ஊத்துச்சேனை வடமுனை பாலத்தில் ஒன்று திரண்ட மக்கள் மற்றும் வெலிக்கந்தை விகாரை விகாராதிபதி கோவில் பூசாரி உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காடுகளுக்குள் உழவு இயந்திரங்களில் மணல் அகழ்வில் ஈடுபடுவதால் காட்டுயானைகள் குடியிருப்புக்களை சேதப்படுத்துகின்றது.
வடமுனை கிராமசேவகர் பிரிவில் மணல் அகழ்வை இரத்து செய், சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்தவேண்டும். மணல் அகழ்வு என்ற போர்வையில் மரக்கடத்தில் இடம்பெறுகின்றது. போன்ற கோஷங்களை எழுப்பியவாறு சுலோகங்களை ஏந்தியவாறு வெலிகந்தை சந்தி வரை ஆர்ப்பாட்ட ஊர்வலமாக சென்று கொழும்பு பொலன்னறுவை பிரதான வீதியை மறித்து வீதியில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த வெலிகந்தை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டகாரரிடம் பொலநறுவை பிரதேசத்திலுள்ள வீதியை செப்பனிட்டு தருவதற்கு உறுதியளித்ததையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி மீண்டும் வடமுனை பாலத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மணல் அகழ்வதற்கு சென்ற உழவு இயந்திரங்களை வடமுனை ஊத்துச் சேனை பகுதிக்கு செல்லவிடாது தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியதுடன் மணல் அகழ்வை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து அங்கிருந்து விலகிச் சென்றனர்.