லண்டனில் இருந்து நாடு திரும்பி காணாமல் போயிருந்த மூதாட்டியின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – அம்பாள்குளத்தில் தனிமையில் வசித்து வந்தநிலையில் காணாமல் போயிருந்த மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த குறித்த பெண்ணை காணவில்லை என, நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டது.

இலண்டனில் மகனுடன் வசித்து வந்த 67 வயதுடைய இராசேந்திரம் இராசலட்சுமி என்ற மூதாட்டி, 3 வருடத்திற்கு முன்பாக இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டி தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டி காணாமல் போயுள்ள விடயம் குறித்து, நேற்று மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நேற்று மாலை 6.00 மணியவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.

சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலத்தை அடையாளம் காட்டுமாறு, குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அவர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு மூதாட்டியின் சடலம் வீசப்பட்டுள்ளது.

பரப்பாலத்தின் கீழ் அதிகளவான முதலைகள் காணப்படுகின்ற நிலையில், மூதாட்டியின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வேறொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சடலம் எடுத்துவரப்பட்டு வீசப்பட்டதாக, சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிழந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை