யாழ்.ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று இரவு 9 மணியளவில் நுழைந்த ரவுடி கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொியவருகையில்,
ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு இளைஞர் குழு தாக்குவதை அப்பகுதியால் வாகனத்தில் வந்த ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து வாகனத்தை நிறுத்திய அவர் சமாதானமாக பேசி பிரச்சினையை முடித்துவைக்க முயற்சித்துள்ளார்.
அங்கு இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய குழு சமாதானம் பேச முயற்சித்தவர் மீதும், அவருடைய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.
இந்நிலையில் சிவில் உடையில் வந்த பொலிஸாரை கண்டதும் குழப்பம் விளைவித்த குழு அங்கிருந்து சென்றுள்ளது.
இந்நிலையில் சமாதானம் பேசுவதற்கு சென்றவரையும், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனையும் பொலிஸார் அழைத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கி நிலையில், இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் சமாதானம் பேச முயற்சித்தவரின் வீட்டிற்குள் வாள்கள் மற்றும் கம்பிகளுடன் நுழைந்த ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், கதவுகளை வாளால் வெட்டி அட்டகாசம் புரிந்ததாகவும், வீட்டிலிருந்த ஒரு தொகை பணத்தை ரவுடிகள் எடுத்து சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.