விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு உதவி செய்யுமாறு படையினர் பணிப்புரை

விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு உதவி செய்யுமாறு படையினர் பணிக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு 4 வது கெமுனு பாதுகாப்புப் படைப்பிரிவின் உன்னிச்சைப் படை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன்ற் எல்.ஆர்.டி அரவிந்த அபேரத்ன தெரிவித்துள்ளார்.

பசுமை விவசாய திட்டத்தின் தேசிய சேதனப் பசளை உற்பத்தி வாரம் ஆரம்ப நிகழ்வு ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தலைமையில் ஏறாவூர் மீராகேணிக் கிராமத்தில் நேற்று ( 25) இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய படை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன்ற் அரவிந்த அபேரத்ன,
இயற்கைப் பசளையை தயாரித்து அதனைப் பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள முடியாத ஒரு குழப்பகரமான சூழ்நிலை தான் தற்போது இருந்து கொண்டிருக்கின்றது.

அதனால் இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்துவதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு, பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.

அத்தகையதொரு பணியில் தற்போது இராணுவமும் இணைந்து கொண்டுள்ளது.
இயற்கைப் பசளைப் பாவனையின்போது விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு உதவி செய்யுமாறு படையினர் பணிக்கப்பட்டுள்ளார்கள். அதற்காக இராணுவத்தினர் எந்நேரமும் தயாரான நிலையிலேயே இருக்கின்றார்கள்.

எனவே விவசாயிகள் எதற்கும் தயங்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக செய்வதற்கு தற்போதிருக்கும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குள்ள சிக்கலான சூழ்நிலையிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும்.

புதியது பழையவை