இலங்கையின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக் கழகம் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்ச அதனை அங்குரார்ப்பனம் செய்து வைப்பதற்காக வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக வவுனியா வருகைக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை காவல்துயைினர் தடுத்துநிறுத்தியமையால் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடும் ஏற்பட்டுள்ளது.
ஆர்பாட்டம் இடம்பெறவிருந்த குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களை பம்பைமடு இராணுவ சோதனைசாவடியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து முன்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், குழப்பநிலை ஏற்பட்டது. எமது உறவுகள் காணாமல் போகவில்லை.
நாங்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா, எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள் நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா? என்று காவல்துறையினரிடம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொலைக் குற்றவாளியே நாட்டின் அரச தலைவராக இருக்கிறார். அவர்களை நம்பியே நாம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம்.
எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் தெரிவித்தபோதும் காவல்துறையினர் அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்ப்பட்டிருந்தது. இதனையடுத்து அரச தலைவரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் இருவரை மாத்திரம் வந்து சந்திக்குமாறு கோரினர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்கவரவில்லை எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன், கொலைக்குற்றவாளி எப்படி நீதிபதியாக மாறமுடியும் என்றனர்.








