மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயதுடைய பெண் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (22) பிற்கல் 2.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த ஆசிரியர் ஒருவருடன் சேர்ந்த குழுவினர் கடத்தி சென்றுள்ளதாக குறித்த பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள 21 வயதுடைய பெண் ஒருவருக்கும் மகிழடித்தீவு பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் பெண்ணின் வீட்டார் ஆசிரியரை திருமணம் முடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த பெண் அரசடித்தீவு பாடசாலையில் உயர் தரப் பரீட்சைக்கு சென்று பரீட்சை எழுதிவிட்டு பாடசாலையில் இருந்து வெளியேறி வீதியில் நடந்து சென்ற போது முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த ஆசிரியர் உள்ளிட்ட குழுவினர் பெண்ணை இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிசென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
