கிழக்குமாகாணத்தில் கல்வி அதிகாரிகள் அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாகவே செயற்பட்டு வருவதனால் மாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பேராளர் மாநாடு மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் தலைமையில் நடைபெற்றநிகழ்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்குமாகாணத்தில் உள்ள அனைத்துக் கல்விவலயங்களில் இருந்து ஆசிரியர்கள் வருகைதந்து கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை கிழக்கில் சேவையினை மீறி வெற்றிடங்களை நிரப்புவதனை விடுத்து முறையான நியமனம் வழங்குதல், குளிர்சாதன அறைக்குள் இருந்து கதிரைகளை பாதுகாப்பதற்காக கல்வியைச் சீரழிக்காதே, கிழக்கில் முறையான மாகாணக் கல்விப்பணிப்பாளரை நியமித்தல் உட்பட 11 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் தொடர்ந்து பேசுகையில் கிழக்குமாகாணத்தில் அரசியல்வாதிகள் தங்களது நலனுக்காகவும் செயற்பாடுகளுக்காகவும் கல்வி அதிகாரிகளைப் பயன்படுத்திவருகின்றனர்.
இதனை அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு கண்காணித்து இச்செற்பாடுகளுக்கு அனுமதிக்கக் கூடாது.
இலங்கை ஆசிரியர் சங்கமானது இலங்கையில் எவ்வித அரசியல் பக்கச்சார்புகளும் இல்லாது முறையாகச் செயற்படுகின்ற ஒருதொழில் சங்கமாக இருக்கின்றது இச்சங்கம் 1954 ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
இதோடு 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடமாகாண ஆசிரியர் சங்கமும் இணைந்து சேவையாற்றிவருகின்றோம்.


