சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு விசா நீடிப்பு செய்யப்பட்டுள்ளதால் தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஒரே ஹோட்டலிலோ அல்லது அதே பிரதேசங்களிலோ தங்கியிருப்பதால், அவர்களுக்கு இடையே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கண்காணித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் மற்றும் ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் வெடித்துள்ள யுத்தம் காரணமாக, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், வன்முறை அதிகரிப்பதாலும் பல சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்ப முடியாமல் இங்கு சிக்கித் தவிக்கின்றனர்.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஏறக்குறைய 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளும் 10,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் தற்போது இலங்கையில் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்தை உதவிக்கு வலியுறுத்தி கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உக்ரேனில் ஏற்கனவே பல பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்துமாறு ரஷ்யாவை வலியுறுத்தினர்.
நேற்று, சுற்றுலா அமைச்சு உடனடி உதவியாக, இரு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை கட்டணமின்றி இரண்டு மாதங்களுக்கு நீடிப்பதாகவும், ஹோட்டல்களும் தங்கியிருக்கும் நேரத்தை நீடிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் கூறியது.
எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையே வன்முறை மற்றும் பகை அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குழுக்களிடையே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க உஷாராக இருக்குமாறு சுற்றுலா பொலிஸார் மற்றும் ஹோட்டல்களுக்கு கூறப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
பெரும்பாலானவர்கள் ஒரே ஹோட்டல்களில் தங்கியிருப்பதால், தனித்தனியாகத் தங்க விரும்புவதாக விருந்தினர்களால் அதிகாரப்பூர்வ கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றாலும், இங்குள்ள அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் நேற்று ட்விட்டரில், உக்ரைன் மற்றும் ரஷ்ய குழுக்களை கண்காணிக்கவும், அவர்கள் ஒரே ஹோட்டல்களில் தங்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
