மட்டக்களப்பு கடற்பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக படகில் தொழிலுக்குச் செல்ல வேண்டிய மீனவர்கள் சாதாரண தோணியில் மீன்படிக்கச் சென்றமையால் தோணி கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் உயிர் தப்பியுள்ளார்.
காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடலில் மீன்பிடிப்பதற்கான மீன்பிடி படகிற்கு மண்ணெண்ணெய் இன்மையால் சாதாரண தோணியில் மீன்பிடிக்கச் சென்றபோது சுழல் காற்று காரணமாக தோணி நடுக்கடலில் மூழ்கிய நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மீனவர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பாலமுனையில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் 52 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.




