கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம் - விமானத்திலிருந்து பலவந்தமாக இறக்கப்பட்ட இளைஞன்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நாட்டிற்கு புறப்படத் தயாராக இருந்த சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானத்திலிருந்து இளைஞர் ஒருவர் குடிவரவு அதிகாரிகளால் பலவந்தமாக இறக்கப்பட்டமை விமானத்தில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிள் அனைத்து சோதனைகளையும் முடித்த பின்னர் டுபாய் செல்வதற்காக விமானத்தில் ஏறியுள்ளார்.

இதன்போது திடீரென விமானத்தில் ஏறிய குடிவரவு அதிகாரிகள் அந்த இளைஞருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அவர் வெளிநாடு செல்ல முடியாதெனவும் தெரிவித்து அவரை பலவந்தமாக விமானத்திலிருந்து இறக்கிச் சென்றுள்ளனர்.

இதன்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இளைஞருக்கு பயணத்தடை விதித்து அவரை கைது செய்வதென்றால் அதற்குரிய ஆவணத்தை காட்டுமாறு கேட்டபோதிலும் அதிகாரிகள் அதனை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரென தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை