மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று மட்/பட்/ சங்கர்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் க.பொ.த (உ/த) பிரிவில் கணித விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு முதல் தடவையிலேயே கணிதத்துறையில் சதசானந்தன் அஜந்தன் எனும் மாணவன் மாவட்ட ரீதியில் 26ம் நிலையை பெற்று பொறியியல் துறைக்கும் மற்றும் மாணவி ராதாகிருஸ்ணன் நிதுஷியா விஞ்ஞான துறையில் உயர்தர பரீட்சையில் தோற்றி விஞ்ஞான இளமானி பட்டப்படிப்பை மேற்கொள்ளக்கூடிய அடைவுமட்டங்களை பெற்றுள்ளனர்.
சங்கர்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் மட்டக்களப்பு நகரப்பகுதியில் இருந்து 50 km தொலைவிலுள்ள கிராமத்தில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள போரதீவுப்பற்று கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள அதிகஷ்ர பிரதேச மற்றும் எல்லைப்புற பாடசாலையாகும்.
மேலும் இப்பாடசாலையானது 2002ம் ஆண்டு வரை 10 வருடங்களாக விசேட அதிரடிப்படையின் முகாமாக செயற்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பாடசாலையுமாகும்.
இப்பாடசாலையானது கடந்த 2019ம் ஆண்டு 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் க.பொ.த. உயர்தரத்திற்கு கணித விஞ்ஞான பிரிவுகளிற்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டு ஆரம்பத்தில் 09 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களில் பாடசாலை முகம்கொடுத்த சவால்கள் காரணமாக குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆய்வுகூடவசதி இன்மை என்பவற்றினால் 04 மாணவர்கள் இடைநடுவில் கணித விஞ்ஞான துறையிலிருந்து விலகி வேறு துறைகளில் தமது உயர்தர கற்கையை மேற்கொண்டனர். 05 மாணவர்கள் க.பொ.த. உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவில் தமது கற்கைநெறியை தொடர்ந்து 2021(2022) ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற உயர்தர பரீட்சைக்கு 03 மாணவர்கள் கணித துறையிலும் 02 மாணவர்கள் விஞ்ஞான துறையிலும் தோற்றியிருந்தனர்.
கணிதப்பிரிவில் தோற்றிய 03 மாணவர்களில் செல்வன் அஜந்தன் அவர்கள் 03பாடங்களிலும் 'A' தர சித்தியுடன் மாவட்டத்தில் 26 ம் இடத்தைப்பெற்று பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
விஞ்ஞான துறையில் தோற்றிய 02 மாணவர்களில் ஒருவரான செல்வி நிதுஷியா 2C, S பெற்று விஞ்ஞான இளமானிப்பபட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு தகுதியையும் பெற்றுள்ளார். விஞ்ஞான துறையில் தோற்றிய மற்றைய மாணவன் 03 பாடங்களிலும் சித்தியை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மண்டூர் சங்கர்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கணித, விஞ்ஞான பிரிவில் உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களின் அடைவுமட்டம் மாவட்ட மற்றும் வலய ரீதியில் பல சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக விஞ்ஞானத்துறையில் மாவட்ட மட்டத்தில் குறித்த பாடசாலை 100% சித்தியை பெற்று இப்பாடசாலை சாதனை படைத்துள்ளது
அதிகஸ்டப் பிரதேசப் பாடசாலையான இப்பாடசாலையில் பௌதீக வளப்பற்றாக்குறை காணப்படுகின்ற போதிலும் அதிபர் திரு.துரைராஜா சபேசன் அவர்களின் வழிகாட்டலில், பிரதி அதிபர் செல்வி வ.தமயந்தி மற்றும் உப அதிபர் திரு.பே.யோகேஸ்வரன் ஆகியோரின் ஒத்துழைப்புடன், சக ஆசிரியர்களின் அயராது உழைப்பு மற்றும் சிறந்த வழி நடத்தல் காரணமாக இப்பாடசாலையானது மாணவர்களின் பரீட்சை அடைவுகளில் கல்வி வலயம் மற்றும் மாவட்ட ரீதியில் பல சாதனைகளை புரிந்துவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளரும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி. நகுலேஸ்வரி புள்ளேநாயகம் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது. அந்தவகையில் இப்பாடசாலை மாணவர்களின் அதீத திறமையை 06 வருடங்களிற்கு முன்பே இனங்கண்ட அவர் பல்வேறு வழிகளில் இப்பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தை முன்னேற்றுவதற்கு உழைத்துள்ளார். குறிப்பாக 2019ம் ஆண்டு இப்பாடசாலை 1AB பாடசாலையாக தரமுயர்த்தியது தொடக்கம் இன்றுவரை அம்மணி இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இவர்களுடன் இணைந்து சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பானது இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக அதிலும் குறிப்பாக கணித விஞ்ஞான பிரிவுகளின் முன்னேற்றத்திற்காக 2015ம் ஆண்டிலிருந்து தனது பங்களிப்பினை பல்வேறு வழிகளில் வழங்கிக்கொண்டு வருவது மட்டுமல்லாமல் 2019ம் ஆண்டு 1AB பாடசாலையாக தரமுயர்த்துவதற்கும் அவ்வாறே கணித விஞ்ஞான பிரிவு இப்பாடசாலையில் ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து இன்றுவரை மாணவர்களின் அடைவுமட்டத்தை உயர்த்தும் நோக்கத்தோடும் குறிப்பாக எல்லைக்கிராம பகுதிகளிலுள்ள மாணவர்கள் இப்பாடசாலைகளிலிருந்து கணித விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் இப்பகுதிகளில் இப்பாடசாலையுடன் இணைந்து செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் இப்பாடசாலையின் இவ்வடைவு மட்டத்திற்கு அவர்களது பங்களிப்பும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
இத்தகைய சாதனையை படைப்பதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட அதேபோன்று செயற்பட்டு வருகின்ற சங்கர்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலய பாடசாலை சமூகத்திற்கும் இப்பாடசாலைக்கு தூணாக இருந்து செயற்படும் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பிற்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ககின்றனர்.